0

Mint Leaves-Puthina-புதினா

புதினா (Mentha spicata) ஒரு மருத்துவ மூலிகையாகும். ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். இதன் அற்புதமான மருத்துவ பயன்களை தெரிந்துகொண்டால் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. சட்னி, ஜூஸ் எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள் மாறுவதில்லை என்பது இதன் முக்கிய அம்சம்.

அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்குகிறது. இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். பசியை தூண்டும். மலச்சிக்கல் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது.

ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது.

புதினாவை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும். ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது.

மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் இதன் சாரை முகத்தில் தடவி வர பலன் கிடைக்கும்.

புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும். புதினாக்கீரை கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்த ஒரு கைகண்ட மருந்தாக இருந்து வருகிறது.

புதினாவை நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு நீர் சேர்த்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை கொடுத்து வந்தால் காய்ச்சல் தணியும். மூச்சுத்திணறல் நிற்க, புதினா இலையைச் சிறிதளவு எடுத்து மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின் இந்த நீரை குடித்தால் மூச்சுத்திணறல் நீங்கும்.

புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து . சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகுக்கு மறைந்துவிடும். கூந்தலும் பட்டுபோல் பளபளக்கும்.

Post a Comment Blogger

 
Top